இயற்கை முறையில் "மணக்கும் மரிக்கொழுந்து" சாகுபடி

அறிமுகம்

   தமிழ்நாட்டில் செம்மண், செம்மண் சரளை மற்றும் நீர்வளம் குறைந்த பகுதிகளிலும் கூட மரிக்கொழுந்து சாகுபடி செய்யலாம். இப்பயிரின் இலை தழைகளில் இருந்து வரும் நல்ல நறுமணத்திற்காகவே அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இலைகளுக்காக மட்டுமே பயிரிடப்படும் பயிர் என்பதால் சற்று கூடுதலாக தழைச்சத்து கொடுத்து வளர்க்க வேண்டும். இப்பயிரின் தண்டுடன் கூடிய இலைகள் மாலைகள் கட்டுவதற்கும், வாசனைத்திரவியங்களுக்காகவும், நறுமண எண்ணெய்க்காகவும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், கரூர் திண்டுக்கல், மதுரை, தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியகுமரி மாவட்டங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இரகங்கள் - சின்னமனூர், பி கே எம்-1

பருவம் - ஜூன், ஜூலை

நிலம்: நல்ல வடிகால் வசதியுடைய நிலமாக இருக்க வேண்டும். செம்மண் , செம்மண் சரளை கலந்த மண் ஏற்றது.

விதை:
600 கிராம் / 1 ஏக்கர்
1.25 கிலோ கிராம் / 1 ஏக்கர்


நாற்றாங்கால் தயாரிப்பு
அடிஉரமாக 200கி அளவு மட்கிய தொழு உரம் இட்டு, நாற்றாங்கல் நிலம் புலபுலவென்று இருக்கும் வண்ணம் நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் 2கி அளவு வேப்பம் புண்ணாக்கு போட வேண்டும். 2x2 என்ற அளவுகளில் மேட்டுப்பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும். நடவு முறைகளைப் பொறுத்து விதையளவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 600கிராம் விதையை 6 கிலோ மணல் என்ற விகிதத்தில் கலந்து தூவ வேண்டும்.

600கிராம் விதை –நடவு இடைவெளி 2அடி x 1அடி / 1 ஏக்கர்

1250கிராம் விதை – நடவு இடைவெளி 1.5 அடி x1.5 அடி, 1 அடி x1 அடி / 1 ஏக்கர்

 

விதைத் தேர்வு
முந்தைய ஆண்டின் விதைகளைப் பயன்படுத்துவது சிறந்தது. 1 ஆண்டுக்கும் மேற்பட்ட விதைகள் முளைப்புத்திறன்கள் பாதிப்படைவதுடன் மகசூல் குறையவும் வாய்ப்பாகிறது. கடைகளில் வாங்கும் பொழுது தரமான விதைகளையே வாங்க வேண்டும்

விதைத் நேர்த்தி
600 கிராம் விதைக்கு 50கிராம் (அல்லது 25மிலி) சூடோமோனஸ்

1250 கிராம் விதைக்கு 100கிராம் (அல்லது 50மிலி) சூடோமோனஸ்

ஐ அளவு குறைந்த தண்ணீரில் கலந்து விதைகளின் மீது நன்கு கவனமாக புரட்டி 10 நிமிடம் கழித்து பின் மணலுடன் கலந்து தூவ வேண்டும்.



நாற்றாங்கால் பராமரிப்பு

விதைநேர்த்தி செய்து விதைப்பதால் நோய்களின் பாதிப்பு பெருமளவு குறைந்துவிடுகிறது. விதைகளைத் தூவிய பின் மட்கிய சாணத்தூள்களை மேலாக தூவவேண்டும். பூவாளி கொண்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மாலை நேரங்களில் நீர்தெளித்து வரவேண்டும்.

30 -35 நாட்களில் நாற்றாங்காலில் இருந்து பிடுங்கி நடவு செய்யலாம்.

நிலம் தயாரிப்பு
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது ஏக்கருக்கு 3 டன் அளவில் ஊட்டமேற்றிய தொழு உரம் இட்டு, மேட்டுப்பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும். சொட்டுநீர்ப்பாசன முறை மிகவும் ஏற்றது. பின் மேற்குறிப்பிட்ட இடைவெளி அளவுகளில் நடவு செய்தல் வேண்டும்.

 

நோய் மேலாண்மை
வேர் அழுகல் நோய் :

1லி சூடோமோனஸ் 1 ஏக்கருக்கு மாதம் ஒருமுறை கொடுத்து வர வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.

தெளிப்பு

அக்னி அஸ்திரம், வெள்ள வேலமரப்பட்ட கரைசல், ஐந்திலைக்கரைசல், பத்திலைக்கரைசல் , வேப்பெண்ணெய்க்கரைசல், கற்பூரக்கரைசல் தெளித்து வர சாறு உறிஞ்சும்பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கலாம்.

உயிர்வழித்திரவங்களான வெர்ட்டிசீலியம் லக்கானி 75 மிலி + பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 75மிலி திரவங்களை 10 லி நீருடன் கலந்து மாலை வேளைகளில் தெளிக்கலாம்.



உர மேலாண்மை

தழைகளை அறுவடை செய்தவுடன் அடுத்த பாசனத்தில்

200லி ஜீவாமிர்தம் ,
2லி மீன் அமிலம் ,
2லி ஹியூமிக் அமிலம்,. 
2லி பஞ்ச காவியா 
இவற்றில் ஏதாவது ஒன்றுடன்

1 லி பாஸ்போ பாக்டீரியா, 
அல்லது
30கி சாம்பல் / 1கி பொட்டாஷ் பாக்டீரியா 
அல்லது
500மி.லி ஈ.எம்
அல்லது
VAM 1 லி கலந்து கொடுக்க வேண்டும். 


இவற்றில் ஏதாவது ஒன்றை சுழற்சி முறையில் ஒவ்வொரு பாசனத்தின் போதும் கொடுக்க வேண்டும். இப்பயிரின் தண்டு மற்றும் இலைகளே அறுவடை செய்யப்படுவதால் அதிக அளவிலான இடுபொடுள்கள் கொடுக்கும் போது மட்டுமே நல்ல வளர்ச்சியும் மகசூலும் பெற முடியும்.

மேல் உரமாக ஊட்டமேற்றிய தொழு உரம் ஒவ்வொரு களையெடுப்பின் பின்னும் கொடுக்கலாம்.


மாதம் ஒருமுறை களையெடுத்தால் போதுமானது.

மண்ணின் தன்மைக்கேற்ப நீர்ப்பாசனம் செய்தல் வேண்டும்.

நடவு செய்த 30 நாட்களில் இருந்து அறுவடை செய்யலாம்.



மகசூல்
ஒரு ஏக்கருக்கு 7000 - 9000கிலோ தழைகளை அறுவடை செய்யலாம்.

இயற்கை இடுபொருள்கள் கொண்டு பராமரிக்கும் பொழுது 6 மாதங்கள் கடந்தும் பராமரிப்பிற்கேற்ப அறுவடை செய்யலாம். விதைக்காக விடப்படும் செடிகளில் விதைகள் மொட்டு மொட்டாக வெளிப்படுவதை சேகரித்து காயவைத்து விதைகளை பத்திரப்படுத்த வேண்டும். அடுத்த ஓர் ஆண்டிற்குள் இவ்விதைகளைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

நறுமண எண்ணெய் உற்பத்திக்கு, மரிக்கொழுந்து செடிகளில் அதிக பூக்கள் வெடிக்கின்ற தருணத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தில் தரையிலிருந்து 10 செ.மீ உயரத்தில் அறுத்து எடுக்க வேண்டும்.

Youtube Video Link
https://youtu.be/3UFH_c5OUNI

ஆலோசனைகளுக்கு அழைக்கவும்
9944450552